Search

குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள்!

 குளிர்ச்சியான காலநிலையின் காரணமாக குளிர்காலத்தில் உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அதனால் தான் பலர் குளிர்காலத்தில் சூப் மற்றும் சூடான பொருட்களை உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர். இது தவிர, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுப் பொருட்களையும் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் குளிர்கால நோய்களைத் தவிர்க்கலாம். குறிப்பாக குளிர்காலத்தில் பழங்களை கட்டாயம் உட்கொள்ள வேண்டும். பழங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்போது குளிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்ற உதவும் சில பழஙகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக குளிர்காலத்தில் வைட்டமின் சி நிறைந்த பழங்களை உட்கொள்வது நல்லது. ஏனெனில் வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்போது குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய அந்த பழங்கள் எவையென்பதைக் காண்போம்.


பேரிக்காய்


பேரிக்காய் குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டிய ஓர் பழம். அதோடு இது குளிர்காலத்தில் மிக எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்றாகும். இதன் ஜூஸ் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். அதோடு, இது குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். பேரிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் உள்ளன. இது நோய்களைத் தடுக்கும். இது தவிர, இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும்.

மாதுளை


குளிர்காலத்தில் கூட எளிதில் கிடைக்கும் பழம் தான் மாதுளை. இந்த மாதுளையை சாப்பிட்டால், அது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். பொதுவாக குளிர்காலத்தில் இரத்தம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இம்மாதிரியான சூழ்நிலையில் மாதுளையை சாப்பிடுவது நல்லது. இது தவிர, மாதுளை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது உடலில் உள்ள இரத்த பற்றாக்குறையைப் போக்குகிறது.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் ஆப்பிள் அனைத்து சீசன்களிலும் கிடைக்கக்கூடிய ஓர் பழம். நீங்கள் ஃபிட்டாக இருக்க நினைத்தால், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள். ஆப்பிளில் வைட்டமின் ஏ, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. ஆப்பிளை தினமும் சாப்பிடுவதால் மூளை மற்றும் உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நீங்கள் குளிர்காலத்தில் ஃபிட்டாக இருக்க நினைத்தால், ஆப்பிள் அல்லது ஆப்பிள் ஜூஸ் குடியுங்கள். தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால், குளிர்காலத்தில் உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

கொய்யா

குளிர்காலத்தில் பலர் கொய்யா சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் இது ஒரு பருவகால பழம். குளிர்காலத்தில் இதை சாப்பிட்டால் இன்னும் ஏராளமான நன்மை கிடைக்கும். பருவகால பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எப்போதும் நல்லது. குளிர்காலத்தில் கொய்யா பழத்தை சாப்பிடுவதால் வயிறு சுத்தமாகும். அதே நேரத்தில் சளி பிரச்சனையும் நீங்கும். இது மட்டுமின்றி, கொய்யாவிலும் வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு சத்தியை அதிகரிக்க உதவுகின்றன.

வாழைப்பழம்

அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்கும் பழம் தான் வாழைப்பழம். ஆனால் குளிர்காலத்தில் பலர் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். ஏனெனில் இது சளி, இருமல் பிரச்சனையை அதிகரிக்கும் என்பதால் தான். ஆனால் உண்மையில் குளிர்காலத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். குழந்தைகளுக்கும் இதை கொடுக்கலாம். இது சளி, காய்ச்சல் போன்ற எதையும் ஏற்படுத்தாது. இருப்பினும், ஏற்கனவே சளி பிடித்திருந்தால், வாழைப்பழத்தை சாப்பிட வேண்டாம். ஏனெனில் அது சளியை மேலும் அதிகரிக்கலாம்.

ப்ளம்ஸ்

குளிர்காலத்தில் ப்ளம்ஸ் சாப்பிடலாம். ப்ளம்ஸில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் உள்ளன. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, ப்ளம்ஸில ஆன்டி-கார்சினோஜெனிக் பண்புகள் உள்ளன. குளிர்காலத்தில் ப்ளம்ஸ் சாப்பிடுவது உடலுக்கு பலம் தரும். அதோடு குளிர்காலத்தில் இது எளிதில் கிடைக்கும் பழமும் கூட.

ஆரஞ்சு

ஆரஞ்சு ஒரு பருவகால பழம். குளிர்காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். பலர் குளிர்காலத்தில் ஆரஞ்சு சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. ஆரஞ்சு குளிர்காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும், ஆரஞ்சு மிகவும் புளிப்பு சுவை கொண்டது, எனவே மாலை அல்லது இரவில் அதை சாப்பிட வேண்டாம். பகலில் ஆரஞ்சு சாப்பிடலாம். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மேலும் ஆரஞ்சு பழத்தை குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் தாமிரம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த சத்துக்கள் சளி, இருமல் போன்ற குளிர்கால பிரச்சனைகளில் இருந்து விடுபட வல்லது.

சாத்துக்குடி

ஆரஞ்சு பழங்களைப் போலவே சாத்துக்குடி சாப்பிடுவதும் குளிர்காலத்தில் நன்மை பயக்கும். இதில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. நீங்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தால், தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடியுங்கள். இது தவிர, ஆரஞ்சு பழம் போன்றும் தோலுரித்து சாப்பிடலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் பல நோய்களை சமாளிக்க உதவும்.


Click here to join whatsapp group for daily health tip 

0 Comments:

Post a Comment