Search

வருகிறது மழைக்காலம்… காய்ச்சல், சளியில் இருந்து தப்பிக்க சில வழிகள்!

பருவ மழைக்காலங்களில் காய்ச்சல் மற்றும் சளியால் பாதிப்பு உருவாகும் என்பதால், ஒவ்வொருவரும் மிகவும் கவனமாகவும், சுத்தமாக இருப்பது அவசியம். வெயிலில் இருந்து நிவாரணம் கொடுக்கும் மழைக்காலத்தில், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் உற்பத்தியாகி மக்களை பாதிக்கின்றன. சமைலையறை முதல் சாலை வரை என தொற்று இல்லாத இடமே இருக்காது. வீடுகளிலும், வெளியே செல்லும்போது சுகாதாரத்தை கடைபிடித்தால் மட்டுமே இந்த தொற்றுகளின் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். அதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் சில உள்ளன.

மழைநீரில் ஒதுங்கியிருத்தல்:

மழைக்காலங்களில், மழையில் நனைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நேரங்களில் முடிந்தளவுக்கு மழையில் நனைவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் உடலில் அரிப்பு, சொறி உள்ளிட்ட தோல் பாதிப்புகள் உருவாகும். இதனால் கூடுமான அளவிற்கு மழையில் நனைய வேண்டாம். எதிர்பாராதவிதமாக மழையில் நனைய நேரிட்டால், உடனடியாக வீட்டிற்கு வந்தவுடன் சுடுதண்ணீரில் குளிப்பது நல்லது. நனைந்த துணிகளை துவைத்துவிட வேண்டும். இதன்மூலம் தொற்று பாதிப்புகள் உங்களுக்கு ஏற்படுவதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளன.

கைகளை சுத்தமாக வைத்திருத்தல்:

நம் உடலுக்குள் நுழையும் பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகள் பெருமளவு முகம் மற்றும் வாய் வழியாக மட்டுமே உடலுக்குள் செல்கின்றன. இதன் மூலம் புதிய வியாதிகளால் பாதிக்க நேரிடுகிறது. வெளியில் எங்கு சென்று வந்தாலும், உடனடியாக கைகளை கழுவும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஹேண்ட் வாஷ் உள்ளிட்டவைகளை பயன்படுத்தியும் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ளலாம்.

ஆரோக்கியமான உணவு:

மழைக்காலங்களில் கடைகளில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உடலுக்கு தேவையான ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே நன்கு சமைத்து சாப்பிட வேண்டும். எளிதாக செரிமானமாகக்கூடிய உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற உணவுகளை சாப்பிடும்போது செரிமானப் பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படாது. சூடான மற்றும் பிரெஷ் உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

சுடு தண்ணீர்:

சுடு தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒருவேளை வெளியில் செல்ல வேண்டியிருந்தால் வீட்டிலேயே சூடான தண்ணீரை தயாரித்து கூடவே எடுத்துச் செல்லுங்கள். தண்ணீரை சுட வைக்காமல் குடிக்கும்போது, அதில் பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுகள் இருக்க வாய்ப்புள்ளது. அந்த நீர் வயிற்றுக்குள் போகும்போது வயிற்றுப்போக்கு ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

தண்ணீர் தேங்கக்கூடாது:

வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சிறிய பாத்திரம், தேங்காய் மூடி, டயர் உள்ளிட்டவைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதன் மூலம் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் உள்ளது. வீட்டின் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment