Search

அதிகமாக ஷாப்பிங் செய்வது ஒருவித மனநோய் : விவரிக்கிறார் மனநல மருத்துவர்!

 தேவையற்ற காரணங்களுக்காக அளவுக்கு மீறி ஷாப்பிங் செய்வது என்ற ஒருவித மனநோயின் வெளிப்பாடு என்று மன நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நோயின் உச்சநிலையை அடைந்தவர்கள் ஷாப்பிங்கிற்கு அடிமையாகி கையில் காசு இல்லாத சமயத்திலும் கூட வாடிக்கையாளரை போல் கடைக்கும் நுழைந்து பொருளை திருடி கொண்டு வந்து விடுவார்கள்.

யாருக்குத்தான் ஷாப்பிங் செய்ய பிடிக்காது? சிறு குழந்தையாக இருக்கும்போது விளையாட்டு பொருட்கள் வாங்குவதில் துவங்கி, வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பும் நமக்கு தேவையான பொருட்களை வாங்குவதும், நமக்கு பிடித்தவர்களுக்கு வாங்கி கொடுப்பதும் மகிழ்ச்சியான ஒன்று தான். முக்கியமாக ஆண்களைவிட பெண்களுக்கு இதில் ஆர்வம் அதிகம். தங்களுக்கு தேவையோ இல்லையோ, ஏதேனும் ஒரு புதிய பொருள் சந்தையில் அறிமுகமானதும் அதை வாங்கி உபயோகப்படுத்தி பார்த்து, பின்பு தூக்கி எறிவதில் பெண்களுக்கு எப்போதும் அலாதியான சந்தோஷம் உண்டு.

இவ்வளவு நாட்கள் இது பெண்களாகிய எங்களுக்கு மட்டும் தான் புரியும் எனவும், பெண்களின் இயல்பே இப்படித்தான் என்பது போலவும் வாதங்கள் பெண்களின் தரப்பில் வைக்கப்பட்டு வந்த நிலையில், அதிகமாக ஷாப்பிங் செய்வது என்பது ஒருவித மனநோய் என மன நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். BSD என பெயரிடப்பட்டுள்ள இந்த “பையிங் ஷாப்பிங் டிசாடர்” பொதுவாக ஷாப்பிங் செய்வதற்கு அடிமையான ஒருவரை குறிக்கிறது. ஒரு பொருள் நமக்கு அத்தியாவசியமாக தேவையே இல்லை எனினும் அதை பார்த்து விட்டதாலேயே அல்லது ஏதேனும் வாங்க வேண்டும் என்பதற்காகவே அப்பொருளை வாங்குவது போன்றவை இந்த நோய் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

உலகில் பலருக்கு இந்த அறிகுறிகள் இருப்பதாக தெரிய வந்தாலும், இதனை கண்டறிவதற்கான சரியான வழிமுறை தற்போது வரை வெளியிடப்படவில்லை. கிட்டத்தட்ட சூதாட்டத்திற்கு அடிமையாகி இருக்கும் மக்களைப் போலவே, இந்த ஷாப்பிங் டிசார்டரால் பாதிக்கப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். தங்களுக்குத் தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதை அறிந்தும் தேவையற்ற பொருளை வாங்குவதும் இணையதளங்களில் தேடித் தேடி பொருட்களை வாங்குவதில் ஆர்வமாக இருப்பதும் இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.

இதில் தாங்கள் செய்வது தவறான செயல் என்றும் தனக்கு தேவையே இல்லாத பொருள் என்றும் இதை வாங்குவதால் எந்த பயனும் இல்லை ஆகியவை தெரிந்தும், அப்பொருளை வாங்கும் எண்ணத்தை அவர்களால் கட்டுப்படுத்தவே முடியாது. இந்த நோயின் உச்சநிலையை அடைந்தவர்கள் ஷாப்பிங்கிற்கு அடிமையாகி கையில் காசு இல்லாத சமயத்திலும் கூட வாடிக்கையாளரை போல் கடைக்கும் நுழைந்து பொருளை திருடி கொண்டு வந்து விடுவார்கள். அந்த அளவிற்கு ஷாப்பிங் மோகம் அவர்களை ஆட்டி வைக்கிறது.

இந்த ஷாப்பிங் செய்வதற்கு அடிமையானவர்களின் மன நோயைப் பற்றி துவாரகாவின், HCMCT மணிபால் மருத்துவமனையில் பணிபுரியும் உளவியல் நிபுணர் ருச்சி சர்மா என்பவர் நோய்க்கான சில அறிகுறிகளை பற்றி தெரிவித்துள்ளார்.

மொபைல் போனில் நீண்ட நேரத்தை செலவிடுதல்:

இவர்கள் தினந்தோறும் சந்தையில் ஏதாவது புதிய பொருள் அறிமுகமாகியுள்ளதா என்பதை பார்ப்பதற்காகவே மொபைல் போனில் அதிக நேரத்தை செலவிடுவார்கள். பொருட்கள் வாங்கும் வலைதளத்திற்கு தினமும் சென்று அப்பொருட்களை தேடி தேடி வாங்குவார்கள். இது ஷாபாஃபோலிக் என்ற நோயின் அறிகுறிகளுள் ஒன்று.

கடன் வாங்கி ஷாப்பிங் செய்வது

இது நான் நோயின் முற்றிவிட்டதர்கான அறிகுறி ஆகும். ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களால் ஷாப்பிங் செய்யும் ஆசையை கைவிட முடிவதில்லை. அவர்கள் விரும்பும் பொருள் மிக அதிக விலையோடு இருந்தாலோ அல்லது அவர்களுக்கு விரும்பும் பொருளை வாங்குவதற்கு அவர்களிடம் பணம் இல்லை என்றாலோ, யாரிடமாவது கடன் வாங்கியாவது அந்தப் பொருளை வாங்க வேண்டும் என்று துடிப்பார்கள். ஒரு முறை இரண்டு முறை என எப்போதாவது முக்கிய தேவைக்காக கடன் வாங்கினால் அதில் பிரச்சனையில்லை. ஆனால் அடிக்கடி இப்படி கடன் வாங்கி ஷாப்பிங் செய்வது நோய் முற்றி வருவதன் அறிகுறியாக இருக்கும்.

தேவையற்ற பொருட்களை வாங்குவது

இவர்களுக்கு உண்மையாகவே ஒரு பொருள் தேவைப்படாத நேரத்திலும் தன்னுடைய மன அழுத்தத்தை குறைப்பதற்காக ஏதேனும் ஒன்றை வாங்க வேண்டும் என்பதற்காக அப்பொருளை வாங்குவார்கள்.

ஷாப்பிங் செய்த தடயங்களை மறைத்து விடுதல்

இந்த ஷாபிங் செய்யும் நோய்க்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் தங்கள் நெருக்கமானவர்களுக்கு அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியாமல் பல பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். அவ்வாறு செய்யும்போது தேவையற்ற வசைபாடுதல்களில் இருந்து தப்பிப்பதற்காக ஷாப்பிங் செய்த பில், ஷாப்பிங் பேக் ஆகியவற்றை எங்கேனும் யாருக்கும் தெரியாமல் மறைத்து விடுவார்கள் அல்லது அழித்து விடுவார்கள். பெரும்பாலும் அவர்கள் ஷாப்பிங் சென்று வந்த பிறகு அவர்கள் வாங்கியதாக சொல்லும் மதிப்பும் அவர்கள் உண்மையிலேயே வாங்கிய பொருளின் மதிப்பும் மாறுபட்டே இருக்கும்.

இந்த ஷாப்பிங் செய்யும் மனநோயானது அதிக அளவில் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கும் மன அழுத்தத்திலிருந்து விரும்புபவர்களுக்கும் அதிகமாக ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு ஷாப்பிங் செய்வதன் மூலம் அவர்கள் தங்களது மன அழுத்தம் நீங்குவதாக உணர்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்று விடும்போது நெருக்கமானவர்களுடன் உறவில் விரிசல் ஏற்படுவதும், மேலும் தேவையற்ற கோபம் எரிச்சல் ஆகியவற்றையும் மற்றவர்கள் மீது வெளிப்படுத்த துவங்குவார்கள்.

முக்கியமாக அதிகமாக ஷாப்பிங் செய்து செய்து ஒரு கட்டத்தில் மிகப்பெரிய கடனாளியாக மாறிவிடவும் வாய்ப்பு உண்டு. எனவே இப்படிப்பட்ட அறிகுறிகள் உங்கள் வீட்டில் இருக்கும் அல்லது உங்களுக்கு நெருக்கமானவருக்கும் இருப்பதாக தெரிந்தால் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கவுன்சிலிங் அழைத்துச் செல்வது உகந்ததாக இருக்கும்.

Click here to join whatsapp group for daily health tip


0 Comments:

Post a Comment