Search

வேலை கிடைக்காதவர்களுக்கும் வேலை உறுதி... அரசின் அசத்தல் திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?

 Short Term Skill Training (STT):  இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறன்களை அதிகரிக்கும் விதமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Skill Development Corporation) பல்வேறு பயிற்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எந்தவித வேலைவாய்ப்பும் இல்லாமல் புதியதாக வேலைத்தேடும் இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக பயிற்சி பெறலாம்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் என்றால் என்ன? 

தமிழ்நாட்டில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றால் வழங்கப்படும் திறன் பயிற்சிகளை (Skill Training) வடிவமைக்கும், தரப்படுத்தும், மதிப்பீடு செய்யும் அமைப்பாக விளங்கி வருகிறது.

குறுகிய கால திறன் பயிற்சி:  இந்தியத் தொழிலாளர்களில் 62% பேர் 19-24 வயதுக்குட்பட்வர்கள் என்று கணக்கிடப்படுகிறது. ஆனால்,  இதில் 5%க்கும் குறைவானோர் மட்டுமே முறையான செய்தொழிற் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, இளைஞர்களுக்கு தொழிற்நிறுவனங்களுக்கு தேவையான திறன்களை அளிப்பதற்காக  குறுகிய கால திறன் பயிற்சி திட்டம் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் , கட்டுமானம், தோல், சில்லறை விற்பனை, கைவினைப் பொருட்கள், சுற்றுலா விருந்தோம்பல் போன்ற தொழிற் துறைகளின் கீழ் 150 முதல் 300 மணி நேரங்கள் (3 மாதம் முதல் 6 மாதங்க வரையிலாலான) கால அளவு கொண்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது.  

புதிதாக வேலைதேடும் இளைஞர்கள் தங்கள் விருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப தொழிற்  துறைகளில் பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்த பயிற்சி முற்றிலும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.  மேலும், பயிற்சியில் 80%  வருகைப்பதிவு வைத்திருக்கும் மாணவர்களுக்கு பயணப்படி, போக்குவரத்து செலவுகள்  வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். 90 நாட்களுக்குள் சான்றிதழ் பெற்ற தேர்வருக்கு ஏதாவதொரு நிறுவனத்தில் பணியமர்த்தம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். 

எப்படி விண்ணப்பிப்பது?  

திறன் பயிற்சிகளுக்கு பதிவு செய்ய https://candidate.tnskill.tn.gov.in/Candidate/Account/CandidateLogin என்ற இணையதளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

முகப்பு பக்கத்தில், 'Click Here to Register'  என்பதை கிளிக் செய்யவும்

தொலைபேசி எண் ( முதன்மையானது மற்றும்  இரண்டாவது ), ஆதார் எண், நிரந்தர முகவரி, வீட்டு முகவரி ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் தொலைபேசி எண்ணை முதன்மையானதாக  சமரிப்பியுங்கள். ஆதார் எண் சரிபார்க்கப்படும். ஒரு முறை கடவுச் சொல்லை  சமர்ப்பிக்க வேண்டும். 

 உங்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள், கல்வி விவரங்கள், தொடர்பு கொள்வதற்கான விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் (பயணப்படி, போக்குவரத்து செலவுகள் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்)

இறுதி கட்டமாக, உங்கள் விண்ணப்ப படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பயிற்சி வகுப்பைத் தேர்வு செய்வது எப்படி? 

பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர் தனது Dashboard-ன் மூலம், மாவட்டத்தில் தற்போது  செயல்பட்டு வரும் பயிற்சி வகுப்புகள் குறித்தும், வரவிருக்கும் பயிற்சி வகுப்புகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநில, மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்கள் , தொழிற்நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் என 50க்கும் மேற்பட்ட பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

விண்ணப்பதாரர், தனக்கு விருப்பமான துறையில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் விண்ணப்பம்  ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் பயிற்சியைத் தொடரலாம். சில பயிற்சி நிலையங்கள், தங்கும் இடம், உணவு வசதியுடன் கூடிய பயிற்சியை வழங்கி வருகிறது. நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இதற்கான செலவை, அரசு ஏற்றுக் கொள்ளும். 

பயிற்சிக்குப் பிறகு, Assessment Agency -மூலம் விண்ணப்பதாரர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில்,  தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், 90 நாட்களுக்குள் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு குறைந்தது 80,000 பேர் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர்
வேளாண்மை, கட்டுமானம், மேலாண்மை,சுற்றுலா என 30 தொழிற்துறையின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது
பயிற்சி பெற்றவர்களில் குறைந்தது 50% பேர் தனியார் துறையில் பணி நியமனம் பெற்றுள்ளனர்
இடத்தித்தின் கீழ், பயிற்சி நிறுவனங்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 42.40 -ஐ பயிற்சி கட்டணமாக அரசிடம் இருந்து பெற்று வருகின்ற்ன
70% பயிற்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத் தரும் பயிற்சி நிறுவனங்கள் மட்டுமே 100% நிதியுதவியைப் பெற முடியும்

0 Comments:

Post a Comment