Search

நீங்கள் தூங்கும்போதும் பணம் சம்பாதிக்க வேண்டுமா? இந்த 5 டிப்ஸ் உங்களுக்குத்தான்!

 இன்றைய உலகில் நாம் பணத்துக்காக ஒரு பக்கம் ஓடியாடி உழைத்துக்கொண்டிருந்தாலும், நாம் ஏற்கெனவே உழைத்த பணம் நமக்காக உழைத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி நம் பணம் நமக்காக உழைத்துக்கொண்டிருப்பதை பேசிவ் இன்கம் (Passive Income) என்று சொல்லலாம். உலகின் முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளர் வாரன் பஃபெட் இதை இரண்டாவது வருமானம் எனக் குறிப்பிடுவார். அவர், `உங்கள் பணம், நீங்கள் தூங்கும்போதும் உழைத்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் சாகும் வரைக்கும் உழைத்துக்கொண்டிருக்க வேண்டும்’ என்று சொல்லியிருப்பது, மிகவும் அர்த்தமுள்ளதாகும்.

செயல் சார்ந்த வருமானம்

நாம் தொழில், வணிகம் செய்து அல்லது வேலை பார்த்துச் சம்பாதிப்பது. அதாவது தொடர்ந்து ஒரு செயலை செய்து சம்பாதிப்பது ஆக்டிவ் இன்கம் (Active Income). அதாவது செயல் சார்ந்த வருமானம் ஆகும். நம் உடல் நிலை மற்றும் மனநிலை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் எனச் சொல்வதற்கில்லை. வயதாக வயதாக அதன் செயல்பாடு மற்றும் திறன் குறைய ஆரம்பிக்கும், அப்போது நாம் ஏற்கெனவே செயல் மூலம் உருவாக்கியது, செயலற்ற வருமானம் என்கிற பேசிவ் இன்கம் கொடுப்பதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் மற்றும் குடும்பத்தினரின் வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

பொதுவாக, செயலற்ற வருமானத்தைக் கீழ்க்கண்ட ஐந்து முக்கிய வழிகளில் உருவாக்க முடியும்.

1. வட்டி வருமானம், பென்ஷன்

இருப்பதிலேயே அதிக ரிஸ்க் இல்லாமல், சுலபமாகச் செயலற்ற வருமானத்தை உருவாக்க உங்களிடம் இருக்கும் பணத்தை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பென்ஷன் திட்டங்களில் போட்டு வைப்பதாகும். இப்படிப் போட்டு வைப்பதில் இரு பாதக அம்சங்கள் உள்ளன.

ஒன்று இவற்றின் மூலமான வருமானம் பணவீக்க விகிதம் அதாவது, விலைவாசி உயர்வு அளவுக்கு அல்லது அதை விடக் குறைவாக இருப்பதாகும். வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு தற்போதைய நிலையில் ஆண்டுக்கு சுமார் 5% வட்டிதான் கிடைக்கிறது. பென்ஷன் பிளான்கள் மூலமான வருமானம் 5 - 6.5% ஆக உள்ளது. தற்போதைய நிலையில் சில்லறை பணவீக்க விகிதம் சுமார் 6% ஆக உள்ளது.

அடுத்து எஃப்.டி வட்டி வருமானம் மற்றும் பென்ஷன் தொகைக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும். அதிக வரி வரம்பில் அதாவது 20%, 30%-ல் இருப்பவர்களுக்கு வரிக்கு பிந்தைய வருமானம் விலைவாசி உயர்வுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக சுமார் 4 - 5% ஆக இருக்கும். எனவே, பேசிக் இன்கம் உருவாக்க இந்த முறையைத் தவிர்ப்பது நல்லது. அதேநேரத்தில், பேசிவ் இன்கம்மில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், இவற்றைக் கவனிக்கலாம்.

2. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலமும் பேசிவ் இன்கமை உருவாக்கலாம். இதில் ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் வருமான எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடன் ஃபண்டுகள், கலப்பின ஃபண்டுகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்தப் பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யலாம். அல்லது முதலீட்டுத் தொகையை ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பிரித்து இந்த மூன்று வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம், வருமானத்துக்கு எக்காரணம் கொண்டும், டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்யக் கூடாது. காரணம், தற்போதைய நிலையில், டிவிடெண்டுக்கு முதலீட்டாளர் அவரின் வருமான வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டும்.

சிறிது காலம் காத்திருந்து சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) முறையில் பணத்தை எடுத்துப் பயன்படுத்தினால் அதிக வருமானம் கிடைப்பதோடு (காத்திருக்கும் காலத்தில் மூலதன ஆதாயம் அதிகரிக்க வாய்ப்பு), குறைவான வரி அல்லது வரி கட்ட வேண்டி இருக்காது.

கடன் ஃபண்ட் என்கிறபோது முதலீடு செய்து மூன்றாண்டு கழித்து எஸ்.டபிள்யூ.பி முறையில் பணம் எடுக்கும்போது லாபத்துக்குப் பணவீக்க சரிக்கட்டலுக்குப் பிறகு, ஒருவர் எந்த வருமான வரம்பில் வந்தாலும் 20% வரி கட்டினால் போதும்.

இதுவே, ஈக்விட்டி ஃபண்ட் என்கிறபோது ஓராண்டு கழித்து யூனிட்களை விற்று லாபம் பார்க்கும்போது, லாபத்தில் ரூ. 1 லட்சம் வரைக்கும் வருமான வரி கிடையாது. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு ஒருவர் எந்த வரி வரம்பில் வந்தாலும் 10% வரி கட்டினால் போதும்.

இங்கே ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் கடன் ஃபண்டுகள் மூலமும் ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்கள் ஈக்விட்டி ஃபண்ட் மூலமும் பேசிவ் இன்கம் பெறத் திட்டமிடலாம்.

கடன் ஃபண்டுகள் மூலமான வருமானம் மூன்றாண்டு கழித்த நிலையில் வரிக்கு பிந்தைய நிலையில் எஃப்.டி வட்டியைவிட அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு மூலமான வருமானம் பணவீக்க விகிதத்தைவிட அதிகமாகவும், குறைவான வரி கட்டுவதாகவும் இருக்கும்.

3. பங்குச் சந்தை முதலீடு:

தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அடிப்படையில் வலுவான நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது மூலம் நீண்ட காலத்தில் அதிக பேசிவ் இன்கம் கிடைக்கக் கூடும். நிறுவனம் வழங்கும் டிவிடெண்ட் வருமானம் மற்றும் பங்கின் விலை உயர்வு லாபமாக இருக்கும்.

ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் பங்குகளை விற்றால், லாபத்துக்கு முதல் ரூ. 1 லட்சத்துக்கு வரி கிடையாது. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு 10% வரி கட்ட வேண்டி வரும், நிறுவனங்கள் வழங்கும் டிவிடெண்டுக்கும் முதலீட்டாளரின் வரி வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டும்.

இந்த வரியைத் தவிர்க்கும் விதமாக அதிக விலை கொடுத்து நிறுவனங்கள் முதலீட்டாளர் களிடமிருந்து பங்குகளைத் திரும்ப வாங்கிக்கொள்வது அடிக்கடி நடக்கிறது. பேசிவ் இன்கம் தொடர்ந்து எதிர்பார்ப்பவர்கள், நிறுவனத்திடம் பங்கைக் கொடுத்துவிட்டு, குறைவான விலையில் சந்தையில் அந்தப் பங்கை வாங்கிக்கொள்வது லாபகரமாக அமையும்.

நீண்ட காலத்தில் பங்குச் சந்தை மூலமான வருமானம், பணவீக்க விகிதத்தைவிட அதிகமாக இருப்பதோடு, குறைவான வருமான வரி கட்டும் அனுகூலத்துடன் உள்ளது. இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் நிறுவனப் பங்குகளை ஓராண்டுக்கு மேல் விற்று லாபம் பார்க்கும்போது இவை அனைத்தும் சேர்ந்துதான் நிதி ஆண்டில் ரூ. 1 லட்சத்துக்கு வரி இல்லை.

4.ராயல்டி வருமானம்:

ஏதாவது ஒரு துறை குறித்துக் கூடுதல் விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்கள். இந்த விவரங்களை அனுபவத்தின் மூலம் அறிந்திருப்பது கூடுதல் சிறப்பாகும். அவர்கள் புத்தகங்கள் எழுதுவது, பிளாக் எழுதுவது, கோடிங் தெரிந்திருக்கும்பட்சத்தில் மொபைல் போன் ஆப் உருவாக்கி எழுதிக் கொடுப்பது மூலம் ஆண்டுதோறும் வருமானம் கிடைத்து வருமானம். யூடியூப் நடத்துவது மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம். இதில், ஒரு முறை உழைப்பைக் கொடுத்தால் போதும்.

ஆண்டாண்டுக்கு வருமானம் கிடைத்துக்கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு, புத்தகம் விற்க விற்க ராயல்டி என்கிற சன்மானம் கிடைத்து வரும். இதே போல் யூடியூப் வீடியோவை பார்க்கப் பார்க்க வருமானம் வந்துகொண்டிருக்கும்.

இந்த வருமானத்தை எஃப்.டி, கடன் ஃபண்டுகள், ஈக்விட்டி ஃபண்டுகள், பங்குச் சந்தையில் முதலீடு செய்து இரண்டாவதாகக் கூடுதல் பேசிவ் இன்கம் பெற முடியும்.

5.வாடகை வருமானம்:

ஏற்கெனவே சொந்த வீட்டில் இருப்பவர்கள் தங்கள் தேவைக்குப் போக கூடுதலாக இருக்கும் பகுதியை வாடகைக்கு விடலாம். அல்லது கூடுதல் அறைகளை கட்டி வாடகைக்கு விடலாம். இதன் மூலம் தொடர்ந்து பேசிவ் இன்கம் வந்துகொண்டிருக்கும்.

வணிக கட்டடங்களை வாங்கி வாடகைக்கு விடுவது மூலமும் வாடகைக்கு விட்டு பேசிவ் இன்கம் பெற முடியும். இதற்கு லட்சக்கணக்கான ரூபாய் முதலீடு தேவைப்படும்.

ஊட்டி, கொடைக்கானல், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் சுற்றுலா நோக்கில் பலர் வீடுகளை வாங்கி வைத்திருப்பார்கள். அவர்கள் தாங்கள் பயன்படுத்தாத காலத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாடகைக்கு விடுவது மூலம் பேசிவ் இன்கம் ஈட்ட முடியும். பயன்படுத்தாத கார் பார்க்கிங், அதிகம் பயன்படுத்தாத காரை வாடகைக்கு விட்டு சம்பாதிக்காலம்.

வாடகை வருமானம் வரிக்கு உட்பட்டது. கணவன், மனைவி இருவரும் வாடகை வருமானம் பெறுவது போல் இருந்தால் வரி கட்ட வேண்டி இருக்காது. அல்லது குறைவான வரி கட்ட வேண்டி இருக்காது. மேலும், வேறு வருமானம் இல்லை என்றாலும் அடிப்படை வருமான வரி வரம்புக்குள் வரவில்லை என்றால் வரி கட்ட வேண்டி இருக்காது.

இந்த பேசிவ் வருமானத்துக்கு முதலீடு செய்யும்போது ஒருவரின் வயதுக்கு ஏற்ப, ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப அசெட் அலோகேஷன்படி முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வது மூலம் ரிஸ்கை கணிசமாகக் குறைத்து அதிக லாபம் பெற வாய்ப்புள்ளது. வாடகை வருமானம், ராயல்டி வருமானம் என்பது எல்லோருக்கும் கிடைப்பது கடினம். ஆனால், முதலீடு மூலமான பேசிவ் இன்கம் பெறுவது அனைவருக்கும் எளிதாக இருக்கும். அதற்கு இன்றே திட்டமிடலாமே..!

0 Comments:

Post a Comment