Search

அறிகுறிகளே வெளிப்படாவிட்டாலும் நாள்பட்ட சிறுநீரக நோயை தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரியுமா?

 நம் உடலின் முக்கிய உள்ளுறுப்புகளாக கருதப்படும் சிறுநீரகங்கள் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை உடலில் இருக்கும் ரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் நச்சுகளையும், அதிகப்படியான திரவத்தையும் வடிகட்டும் வேலையை செய்கின்றன.

இன்னும் பல முக்கிய நன்மைகளை அளிக்கும் சிறுநீரகங்கள் பிற உள்ளுறுப்புகளை போல பல நோய்களால் பாதிக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்று உலகம் முழுவதும் பொதுவாக காணப்படும் க்ரோனிக் கிட்னி டிசீஸ் (chronic kidney disease - CKD) அதாவது நாள்பட்ட சிறுநீரக நோய் ஆகும். இது பல மாதங்கள் அல்லது ஆண்டுகளாக படிப்படியாக சிறுநீரகம் செயலிழந்து வரும் நிலையாகும். இதில் சிறுநீரகங்களில் சேதம் நீண்ட காலத்திற்கு மெதுவாக நிகழ்வதன் விளைவாக உறுப்புகள் தேவையான அளவு ரத்தத்தை வடிகட்ட முடியாமல் போகிறது.

நாள்பட்ட சிறுநீரக நோய் அறிகுறிகள்:

பொதுவாக CKD-யின் அறிகுறிகளில் கணுக்கால் வீக்கம், பாதம் அல்லது கைகள் வீங்குவது, சோர்வு அல்லது அதீத களைப்பு, மார்பில் வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீரில் ரத்தம் வெளிவருவது உள்ளிட்ட அறிகுறிகள் அடங்கும். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரத்த சோகை, எலும்பு நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையும் ஏற்படலாம். எனினும் சிறுநீரகங்கள் விதிவிலக்கான உறுப்பாக இருந்தது பல நன்மைகளை செய்து வருவதால் சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்து அவை மெதுமெதுவாக சேதமடைய தொடங்கினாலும் அதற்கான அறிகுறிகள் குறிப்பிடும்படி இல்லை மற்றும் இந்த அறிகுறிகள் பொதுவாக ஆரம்ப கட்டத்தில் வெளிப்படுவதில்லை.

சிறுநீரகங்களில் பாதிப்புகள் அதிகமாகும் பட்சத்தில், மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அறிகுறிகளாக சில நேரங்களில் வெளிப்படும். எனவே CKD-யை பொறுத்தவரை அறிகுறிகள் என்பது பாதிப்புகள் தீவிரமான பிறகே வெளிப்படும் என்பதால் ஒருவர் தனக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுவதை முன்கூட்டியே முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் தான் அறிகுறிகளே இல்லாவிட்டாலும் கூட நாள்பட்ட சிறுநீரக நோயை தடுக்க ஒருவர் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

முன்னெச்சரிக்கை:

ஒருவர் தனக்கு CKD அபாயம் ஏற்பட கூடாது என்று விரும்பினால் அவர் தனது உடலில் ஆரோக்கியமான அளவு கொலஸ்ட்ரால், ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருப்பதை உறுதி செய்து அதனை தொடர்ந்து பராமரிப்பதே சிறந்த வழி என்கின்றனர் நிபுணர்கள். ஏனென்றால் உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்களில் உள்ள சிறிய ரத்த நாளங்களை சிரமப்படுத்தலாம். அதே சமயம் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் சிறுநீரகத்தில் இருக்கும் சிறிய நாளங்களில் கொழுப்பு படிவுகள் (fatty deposit) உருவாகலாம். இரண்டுமே சிறுநீரகங்களை சரியாக செயல்பட விடாமல் தடுக்கலாம். மறுபுறம் ரத்தத்தில் அதிக குளுக்கோஸ் இருந்தால் அது சிறுநீரகங்களில் உள்ள சிறிய ஃபில்ட்டர்களை சேதப்படுத்தும்.

பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்:

அளவுக்கு அதிகமாக மது அருந்துவது ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு ஆரோக்கியமற்ற முறையில் அதிகரிக்க வழிவகுக்கும். எனவே ஒருவர் ஆல்கஹாலின் மிதமான நுகர்வை பழகி கொள்ளலாம்.
ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க ஆரோக்கியமான மற்றும் சீரான டயட்டை கடைபிடிப்பது அவசியம்.
அதிகமான நான்-ஸ்டெராய்டல் அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (NSAID கள்) எடுத்து கொள்வது அல்லது நீண்ட காலத்திற்கு வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்து கொள்வது சிறுநீரக ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கலாம். NSAID-க்கான எடுத்துக்காட்டுகளில் Aspirin மற்றும் Ibuprofen அடங்கும்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற இதய நோய்கள் இருந்தால் அவற்றை சரியாக நிர்வகிப்பதற்கும் சிறுநீரகங்கள் நன்கு செயல்படுவதற்கும்  சீரான உணவு முறை அவசியம்.

0 Comments:

Post a Comment