Search

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 உதவித்தொகை : தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு

 Rs. 7,500 for UPSC Exam Aspirants:  2023- 24 நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்களை ஊக்கமளிக்கும் வகையில் மாதம் ரூ.7,500 நிதி வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.  இந்த தேர்வு மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வு (Prelims Examination) , முதன்மைத் தேர்வு (Main Examination), Interview (நேர்காணல் தேர்வு).

முதல்நிலைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு செல்கின்றனர். இறுதியாக, முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இந்த தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.

இந்த தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து எழுதும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இன்றைய நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக மத்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.இந்தப் போக்கை மாற்றியமைக்க குடிமைப் பணிகள் தேர்வு மாணவர்களுக்கு மேம்பட்டப் பயிற்சி மற்றும் பயிற்சிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Skill development Corporation) செயல்படுத்தும் என்று தெரிவித்தார்.

ஒவ்வோராண்டும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்குத் தயாராகுவதற்காக மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஊக்கத்தொகையாக  ரூபாய் 25,000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.  இந்த திட்டத்திற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment