Search

இரவில் எந்த நேரத்தில் உணவு அருந்த வேண்டும் தெரியுமா..? மருத்துவர் தரும் விளக்கம்..!

 நாம் அனைவரையும் இரவில் நமக்கு தோன்றும் நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை வைத்திருப்போம். ஆனால் இரவு உணவிற்கு சிறந்த நேரம் எது? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இரவில் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதை விட முக்கியமானது சரியான உணவை சரியான அளவில் சாப்பிட வேண்டும் என்பது.

நாம் செய்யும் சில இரவு உணவு தவறுகளைப் புரிந்துகொள்வது அவசியமான ஒன்றாகும். இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் லீமா மகாஜன் கூறிய விளக்கத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

லீமா மகாஜன் கூற்றுப்படி, இரவு உணவுக்குப் பிறகு ஸ்நாக்ஸ் வகைகள் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும் என்றும், இரவு உணவு உண்ட உடனே படுக்கைக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார்.

உடல் எடையை குறைக்க நினைக்கும் பலரும் இரவு உணவில் கார்போஹைட்ரேட்டுகளை தவிர்த்து விடுகின்றனர் கார்போஹைட்ரேட்டுகள் கொழுப்பை அதிகரிக்கும் என்று நினைத்து மக்கள் பொதுவாக கார்போஹைட்ரேட்டு நிறைந்த உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். மதிய உணவு அல்லது இரவு உணவை தவிர்த்தல் அல்லது பகலில் குறைந்த அளவில் சாப்பிடுவது போன்ற காரணங்களினால் ஒரு சிலர் ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய மொத்த கலோரிகளை எடுத்து கொள்ள தவறவிடுகின்றனர். இதனால் கலோரி பற்றாக்குறை ஏற்படுவதாக அவர் எச்சரிக்கிறார்.

தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் இரவு உணவு அருந்துவது சிறந்தது என்று மகாஜன் தெரிவித்துள்ளார். இப்படி சாப்பிடுவதால் இரைப்பை ரிஃப்ளக்ஸ் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று கூறியுள்ளார். அதாவது வயிற்றின் அமிலம் உணவுக்குழாயில் சென்று, அதனால் உண்டாகும் அசௌகரியம் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்கிறார்.

மேலும் இதுகுறித்து விளக்கும் ஃபரிதாபாத், மெட்ரோ மருத்துவமனை HOD- உணவியல் நிபுணர், டிடி ராஷி தந்தியா, பெரும்பாலான மக்கள் இரவு 10-11 மணிக்குள் தூங்கும் முறையை பின்பற்றுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு, இரவு உணவு நேரம் 6-8 மணியளவில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

6-8 மணியளவில் இரவு உணவை சாப்பிடுவதால், படுக்கை செல்வதற்கு முன் செரிமானத்திற்கு போதுமான நேரத்தை அனுமதிக்கிறது. உணவு நமது செரிமான அமைப்பில் ஒரு பயணத்தை மேற்கொள்கிறது, அது நம் வாயில் நுழையும் தருணத்திலிருந்து வயிற்றுக்கு வந்து இறுதியில் சிறுகுடலில் உறிஞ்சப்படும் வரை நடக்கும் நடைமுறையானது எளிதாக நடக்க வேண்டும் என்றால் நாம் சீக்கிரமாகவே சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

டாக்டர் டான்டியாவின் கூற்றுப்படி, நாம் சாப்பிடும் உணவு முழுமையாக செரிமானமாக சுமார் 1.5 - 2 மணிநேரம் ஆகும். உணவுகளை நமது குடல் உறிஞ்சி சத்துக்களை பிரிக்கும் செயல்முறையும் இதில் அடங்கும். தூக்கத்திற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் உணவை உட்கொள்வது செரிமான அமைப்பு அதன் செயல்பாடுகளை திறம்பட செயல்படுத்த தேவையான நேரத்தை வழங்குகிறது. நாம் 9 மணிக்கு மேல் சாப்பிட்டுவிட்டு உடனடியாக தூங்க செல்வதால், நமது உடலுக்கு போதுமான நேரம் இருக்காது, இதனால் அஜீரணம், அசௌகரியம் அல்லது தூக்கத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்று கூறினார்..

மேலும், செரிமானம் முழுமையாக நடைபெறவில்லை என்றால் நமது உடலில் ஊட்டச்சத்துக்களை சரியான முறையில் உறிஞ்சுவதும் தடைபடுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இரவு உணவுக்கும், தூக்கத்திற்கும் இடையே 2-3 மணிநேர இடைவெளியை கடைப்பிடிப்பது சிறந்தது என்று டாக்டர் டான்டியா விளக்கியுள்ளார்.

🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment